சபாநாயகர் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது: காங்., பெண் எம்பிக்கள் கடிதம்

22

புதுடில்லி:'' காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் மீது ஆளுங்கட்சியின் கட்டாயத்தின் பேரில் குற்றம்சாட்டுவது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது,'' என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரியங்கா, ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் எழுதிய கடிதத்தில்கூறியுள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

காங்கிரஸ் எம்பி ராகுல், முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் குறித்து பேசினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகரும் கண்டிப்பு காட்டினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட காங்., - எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன் உள்ளிட்ட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


லோக்சபா கடந்த 4ம் தேதி முதலே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகை யிட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க் களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி உரை மீது, மாலை 5:00 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.இதனால், பதிலுரை அளிக்க பிரதமர் மோடி, லோக்சபாவுக்கு வரவில்லை.


இது தொடர்பாக லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில், ''லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்று காங்., - எம்.பி.,க்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் கிடைத்தது. அதனாலேயே சபைக்கு வர வேண்டாம் என, அவரை கேட்டுக் கொண்டேன். அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும்,'' எனத் தெரிவித்து இருந்தார்.

கடிதம்



இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் பிரியங்கா, ஜோதிமணி, சுதா, உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.


அவர்கள் கூறியதாவது: நாங்கள் இந்த கடிதத்தை ஆழ்ந்த வேதனையுடனும், அரசியலமைப்பு சட்டப் பொறுப்பு என்ற வலுவான உணர்வுடனும் எழுதுகிறோம். சபாநாயகர் என்ற பொறுப்பிலும், இந்த அவையின் அரசியலமைப்பு பாதுகாவலர் என்ற முறையில் இருக்கும் நீங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் மீது ஆளுங்கட்சியின் கட்டாயத்தின் பேரில் குற்றம்சாட்டுவது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது.

சஸ்பெண்ட்



சபாநாயகர் என்ற முறையில், பார்லிமென்ட்டின் கண்ணியம், நேர்மை மற்றும் கட்சி பாரபட்சமின்றி அனைத்து எம்பிக்களின் பாதுகாப்பு என்பது உங்களின் பொறுப்பு. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசிய பிறகு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு வேண்டும் என்றே பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது முன் எப்போதும் நடக்காதது.


மறுபுறம் ஆளுங்கட்சி விருப்பப்படி, இண்டி கூட்டணியை சேர்ந்த 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜ எம்பி ஒருவர் முன்னாள் பிரதமர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசுகிறார்.உங்களை சந்தித்து நீதி கேட்டதுடன், அந்த பாஜ எம்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக்கோரிய போது, தவறு நடந்து விட்டது என்று ஒப்புக்கொண்டு 4 மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறினீர்கள்.

எளிய பின்னணி



மீண்டும் வந்து சந்தித்தபோது அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தீர்கள். இதன் மூலம் இந்த விவகாரத்தில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்பதை காட்டுகிறது. இது சபாநாயகரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறது.


அன்றைய தினம் பிரதமர் மோடியின் பதிலுரை லோக்சபாவில் இடம்பெறவில்லை. மறுநாள், பிரதமர் அவைக்கு வராதது குறித்து ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு ஏற்ப ஆதரவாக பேசியதுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். எங்களின் போராட்டம் அமைதி வழியிலானது. ஜனநாயக விதிமுறைகளின்படி நடந்தது. எங்களில் பலர் சாதாரண பின்னணியை கொண்டவர்கள். முதல்முறை அரசியல்வாதி ஆவார்கள்.

நம்புகிறோம்



நாங்கள் மக்கள் விரோத அரசுக்கு எதிராக போாரடியதாலும், அதற்கு பிரதமரை பொறுப்பு ஏற்க கூறியதாலும் நாங்கள் குறி வைக்கப்பட்டுள்ளோம். பிரதமர் மோடி, லோக்சபாவுக்கு வராததற்கு அச்சுறுத்தல் என்பது காரணம் அல்ல. பயம் தான் காரணம். எதிர்க்கட்சிகளை சந்திக்க அவருக்கு தைரியம் இல்லை.எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கையில்லை. அச்சுறுத்தல் மூலம் எங்களின் குரலை அமைதிப்படுத்த முடியாது. வெளிப்படைத்தன்மை மூலமே சபாநாயகர் அலுவலகத்தின் கண்ணியத்தையும், அவையின் பெருமையையும் கொண்டு வர முடியும் என நாங்கள் நம்புகிறோம்.


சபாநாயகர் மீதும், உங்கள் மீதும் மரியாதை வைத்துள்ளோம். ஆளுங்கட்சி உங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது தெளிவாகி உள்ளது. லோக்சபாவின் காவலர் என்ற முறையில் நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதிவேண்டும்



இதன் பிறகு பார்லிமென்ட் வளாகத்தில் பிரியங்கா கூறியதாவது: சபாநாயகர் அவமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் அவரே அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பிரதமர் மீது பெண் எம்பிக்கள் கை வைக்க முடியாது. என்னையும் சேர்த்து காங்கிரசில் 11 பெண் எம்பிக்கள் இருக்கிறோம். சபாநாயகரின் அறிக்கை தவறானது. அரசின் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவைக்கு வர பிரதமருக்கு தைரியம் இல்லை. இதனால் தான் அவர் சார்பாக இதுபோன்ற அறிக்கையை சபாநாயகர் வெளியிடுகிறார்.


லோக்சபாவுக்கு சென்றுவிட்டு திரும்புவது கவலை அளிக்கிறது. ஒரு நிமிடம் கூட அவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படவில்லை. இது முட்டாள்தனமானது. இது ஜனநாயகம் இல்லை. எதற்காக இங்கு வருகிறோம். அவரை பேச மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement