இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை: இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேசிய, அமைச்சர் ராஜகண்ணப்பன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுக்கோட்டையில் நடந்த கட்சி நிகழ்வில், தேசத்தை இரண்டாக பிளக்கும் நோக்கத்தில், தி.மு.க., அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது, வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இதுநாள் வரை, மக்களை வடக்கு, தெற்கு என பிரித்து, வட மாநிலத்தவர் என ஒரு சாராரை இழிவாக பேசிய, தி.மு.க., தலைவர்கள், தற்போது, ஒரு படி மேலே சென்று, பாரத தேசத்தையே இரண்டாக பிளக்கும் நோக்கில் பேசியிருப்பது, தி.மு.க.,வின் பிரிவினைவாத போக்கை பட்டவர்த்தனமாக்கி உள்ளது.
அதிலும், அமைச்சராக பதவி ஏற்று, இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில், பொது வெளியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தொடர்ந்து, தேச ஒற்றுமையை குலைத்து, பிரிவினைவாதத்தை விதைத்து, ஓட்டு பிச்சை எடுக்கும் தி.மு.க., வேரோடு பிடுங்கி எறியப்படும் நாள் தொலைவில் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.