மத்திய பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லை; மத்திய அமைச்சர் புகார்

22

சென்னை: ''மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு ஒதுக்கியதை விட, பா.ஜ,., ஆட்சியில், 300 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

நாட்டில் வங்கி துறையில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர, உயர் மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல், ரயில்வே, தொழிற்சாலை உட்பட அனைத்து துறைகளிலும் முதலீடுகளை ஈர்க்க, சீர்திருத்தங்கள் வர உள்ளன.

தமிழகத்தில் இரு விரைவு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான மூலதன செலவுகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 12.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் மகசூலை அதிகரிக்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்திற்கு அதிக பலனை கொடுக்கும்.

மத்திய பட்ஜெட்டை, முதல்வர் ஸ்டாலின் முறையாக படிக்கவில்லை என, கருதுகிறேன். ரயில்வே, துறைமுகம் என, பல திட்டங்களில் தமிழகம் பெயர் இடம்பெற்றுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் ஒதுக்கியதை விட, தற்போது தமிழகத்திற்கு, 300 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement