மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை

22

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த 2022ம் நிதியாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 1ம் தேதி, மத்திய அரசு கொண்டு வந்த பணிபுரியும் மகளிருக்கான சக்தி நிவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில், 2023ம் ஜூலை 13ம் தேதி தொடங்கப்பட்டதே தோழி விடுதி. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.223 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.147.18 கோடி வழங்கியுள்ளது. உண்மை நிலை இப்படி இருக்க, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், தோழி விடுதியை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறியிருக்கிறார்.



மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார். இப்படி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யச் செலவிடும் நிதியில், முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை சொந்தமாக யோசித்துச் செயல்படுத்தியிருக்கலாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement