உடலில் தடிப்பு ஏற்பட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு: பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த மாணவி, உடலில் தடிப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். அவரை விஷ பூச்சி கடித்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 32; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி, 28. இத்தம்பதியின் மகள் ரக்ஷிதா, 8; குமரமங்கலம் ஊராட்சி தொடக்க பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தார்.

நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ரக் ஷிதா ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது உடலில், திடீரென தடிப்புகள் ஏற்பட்டு, மயக்கமடைந்தார். ஆசிரியர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ரக்ஷிதா, நேற்று மதியம் உயிரிழந்தார்.

திருச்செங்கோடு போலீசார், மாணவிக்கு உடல்நல குறைபாடா அல்லது விஷப்பூச்சி கடித்து இறந்தாரா என, விசாரிக்கின்றனர்.

Advertisement