பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அருங்காட்சியகங்கள்

த ற்போது ஜவுளி நகரமாக விளங்கும் கோவை, தொல்லியல் மற்றும் வரலாற்று ரீதியாகவும் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. வெள்ளலுார், போளுவம்பட்டி, பேரூர் போன்ற பழம்பெரும் வரலாற்று இடங்களால் சூழப்பட்டுள்ள இப்பகுதி, பண்டைய காலத்திலேயே முக்கியமான வணிக மற்றும் பண்பாட்டு மையமாக இருந்ததற்கான சான்றுகளை வழங்குகிறது.

வெள்ளலுாரில் நடத்த அகழ்வாராய்ச்சிகளில், கி.மு. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ம் நூற்றாண்டு வரையிலான ரோமானிய மன்னர்களால் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஆபரணங்களும் கண்டெடுக்கப்பட்டு, அக்காலத்தில், கோவை பகுதி ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.

போளுவம்பட்டியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் டெரகோட்டா சிலைகள், முத்திரைகள், சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. பேரூருக்கு தெற்கே சுண்டகமுத்தூர் அருகேயுள்ள கரடும்பாறை என்னும் பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, பண்டைய பெருஞ்சாலை இருந்ததற்கான சுவடுகளை வெளிப்படுத்துகிறது. அதில், சோழர்களின் ஆதித்யா I (கி.பி. 871-909) காலத்தை சேர்ந்த ராஜகேசரி என்ற பெயரால் ஒரு நெடுஞ்சாலை பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இன்றுவரை அடையாளம் காணப்பட்ட ஒரே பண்டைய நெடுஞ்சாலையாகும். அது பேரூர், வெள்ளலுார், சூலுார், கொடுமணல் வழியாக சென்று, பாலக்காடு கணவாய் வழியாக கேரளத்தின் பண்டைய சேரநாட்டை இணைத்து, அமராவதி நதிக்கரையில் உள்ள சேர நகரமான கரூரை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

கோவையின் தொல்லியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், 1981ல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.

Advertisement