காந்தையாற்றின் குறுக்கே பாலம் மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் உள்ளன. காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்தால், மலைவாழ் மக்கள் பரிசலில் பயணம் செல்வது வழக்கம்.

காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 15 கோடியே, 40 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 2023 பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கின. மெதுவாக நடந்தன. இரண்டு ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஐந்து பில்லர்களும், இரண்டு இடங்களில் பாலத்தின் மீது சாலையும் அமைத்துள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு முன் பெய்த மழையால், பாவனி சாகர் அணையில், 102 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது. அணையின் தேக்கத் தண்ணீர் காந்தையாற்றில், 30 அடிக்கு தேங்கியது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக மக்கள், விவசாயிகள் பரிசலில் பயணம் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளில், பாதி அளவு பணிகள் கூட நடைபெறவில்லை. ஆற்றின் குறுக்கே இருந்த சாலையையும் இடித்து விட்டதால், ஆறு மாதங்கள் பரிசலில் பயணம் செய்து வந்தோம். தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. அதனால் நெடுஞ்சாலை துறை அரசு அதிகாரிகள், உடனடியாக அதிக ஆட்களை வைத்து, பாலம் கட்டும் பணிகளை துவக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கூறினர்.

Advertisement