பார்லியில் உண்மையை பேசினேன்... பின்வாங்க மாட்டேன் என்கிறார் ராகுல்

8


புதுடில்லி: 'நான் பார்லியில் உண்மையைத்தான் பேசியிருக்கிறேன். விவசாயிகள் பிரச்னையில் இருந்து ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டேன்,' என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது; காங்கிரசும், ஒட்டுமொத்த இந்தியாவும் உணவுப் பாதுகாப்புக்காகப் போராடியது. ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளையும், நமது உணவுப் பாதுகாப்பையும் ஏமாற்றிவிட்டார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம், அவர் பருத்தி, சோயா, ஆப்பிள் மற்றும் பழ விவசாயிகளை விற்றுவிட்டார்.

பல ஆண்டுகளாக, வெளிநாட்டவர்கள் இந்தியாவின் விவசாய சந்தையைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களுக்காகக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளார். டிரம்ப் கையில் மோடியின் கடிவாளம் உள்ளது.

அமெரிக்க விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பண்ணைகள் உள்ளன. அவர்களுக்கு அரசு மானியங்கள் வழங்கப்படுகின்றன. நமது விவசாயிகளிடம் சிறிய பண்ணைகளே உள்ளன. அவர்களுக்கு முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை.

பிரதமர் நாட்டையும், விவசாயிகளையும் விற்றுவிட்டார். என் மீது நீங்கள் வழக்குத் தொடரலாம். என் மீது உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். அதைப்பற்றி எனக்கு கவலையல்ல. நான் பார்லியில் உண்மையைத்தான் பேசியிருக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் விவசாயிகளுடன் நிற்கிறேன். நான் ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டேன். இந்த அநீதியை நாங்கள் நடக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement