12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு: தேர்தல் நெருங்குவதால் அரசு துறைகள் சுறுசுறு
சென்னை: சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், தமிழக அரசு துறைகள் பல்வேறு பணிகளை மேற்கொள்ள, கடந்த 12 நாட்களில், 4,385 டெண்டர்களை வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். எனவே, தேர்தலுக்கு முன்னதாகவே அனைத்து துறைகளிலும், புதிய பணிகளுக்கு டெண்டர் விட அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சாலை சீரமைப்பு, குடிநீர் குழாய் சீரமைப்பு, மருத்துவமனை கட்டடம் கட்டுமானம் உட்பட பல்வேறு பணிகளுக்கு 12 நாட்களில், 4,385 டெண்டர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு உத்தேசமாக 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம்.
அரசு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி நடந்த போது, அனைத்து துறை பணியாளர்களும் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், டிச., மற்றும் ஜன., மாதங்களில், அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. அந்த மாதங்களில் அதிக அளவில் டெண்டர்கள் கோர முடியவில்லை. அப்பணிகள் முடிந்த பின், தற்போது வழக்கமான பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
மழைக்காலங்களில் சேதமான சாலைகள், குடிநீர் குழாய்கள், கட்டடங்கள் பழுது போன்றவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. அதனால் தான், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்யும் பணிகளுக்கு, டெண்டர் வெளியிடப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாளிலும், அதிக டெண்டர்கள் வெளியிடப்படும்.இவ்வாறு கூறினர்
@quote@
சென்னை மாநகராட்சி நிர்வாகம் தினமும் சராசரியாக, 40 டெண்டர்களை வெளியிட்டு, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க, அவசரகதியில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வழக்கமான அரசு டெண்டர்களை வெளியிட, பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக, நெடுஞ்சாலை டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், இந்த மாதத்தில், 10 நாட்களில், 248 டெண்டர்களை மாநகராட்சி வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமானது?
இவையெல்லாம், தேர்தலுக்கு முன் கல்லா கட்ட, தி.மு.க., அரசின் தந்திரமா என்பதை, முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.quote
தேர்தல் ஆணையம் உடனே தலையிலிட்டு எல்லா டெண்டர்களையும் உடனே நிறுத்த வேண்டும் என்ன அவசரம் இப்போது ஆட்சியில் பணமாக்க பார்க்கும் குழுவை தோற்கடிக்க வேண்டும் தேர்தலுக்கு பிறகு வரும் அரசு அவைகளை நன்றாகவே பார்த்துக்கொள்ளும்