'சீல்' வைத்த கட்டடத்தில் அத்துமீறி கட்டுமான பணி உரிமையாளர்கள் மீது மாவட்ட கமிட்டி போலீசில் புகார்

ஊட்டி: ஊட்டி, கோத்தகிரியில் ' சீல் ' வைத்த கட்டடத்தில் அத்துமீறி கட்டுமான பணிகள் நடந்து வந்ததை கண்டறிந்த அதிகாரிகள், உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்தனர்.

நீலகிரியில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு 'ஐகோர்ட்' உத்தரவுப்படி, 'சீல்' வைக்கும் நடவடிக்கைக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி, மாவட்டத்தின் பல இடங்களிலும், ஆய்வு மேற்கொண்டு, விதி மீறி கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 'சீல்' வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, கடந்த நான்கு மாதங்களில், 150 விதி மீறிய கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிசோலை மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈளாடா பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட சில கட்டடங்களுக்கு,'சீல்' வைக்கப்பட்டது. அந்த கட்டடங்களில், விதிகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக புகார் வந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பணிகள் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், '' ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட ஆறு கட்டடங்களில் அத்துமீறி நுழைந்து கட்டுமான பணிகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அதன், உரிமையாளர்களான பாக்கியலட்சுமி, சிவராஜ், சக்தி ஆனந்தன், மீனா, சிவாஜி, சுனில் சவுத்ரி மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் மீது மாவட்ட கமிட்டியின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement