டி.ஜி.பி., நியமன விவகாரம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
- டில்லி சிறப்பு நிருபர் -
'தமிழக டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட பரிந்துரை பட்டியலை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மீறும் வகையில், டி.ஜி.பி., நியமனம் நடந்ததாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபு ல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தற்போதைய பொறுப்பு டி.ஜி.பி.,யாக இருப்பவரும், நிரந்தர டி.ஜி.பி., பதவிக்கான போட்டியில் இருப்பதால், அவர் தேர்வுக்குழுவில் இடம் பெற முடியாது.
எனவே, அவருக்கு பதிலாக கூடுதல் உள்துறை செயலரை அந்த குழுவில் சேர்ப்பது குறித்து கோ ரிக்கை வைத்தோம். ஆனால், யு.பி.எஸ்.சி., அதை ஏற்கவில்லை' என, தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் தெரி விக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,க்கான தேர்வு குழுவில், தமிழகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில், ஒருவர் டி.ஜி.பி., இல்லாத பட்சத்தில், அந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரியை தேர்வு குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் அடிப்படையில், தமிழக டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட பரிந்துரை பட்டியலை தயாரித்து யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி இரண்டு வார காலத்திற்குள் யு.பி.எஸ்.சி., தன் இறுதி பரிந்துரையை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'டி.ஜி.பி., நியமனத்தில் பல மாநில அரசுகள் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றன. இனி, அப்படி நடந்தால், யு.பி.எஸ்.சி., நேரடியாக எங்களிடம் புகார் அளிக்கலாம்' என உச்ச நீதிமன்றம், தெலுங்கானா வழக்கில் எச்சரித்திருந்தது.
அதனை தமிழக அரசுக்கும் தற்போது உச்ச நீதிமன்றம் நினைவுப்படுத்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.