அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி: ராமதாஸ்

6

''அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, அன்புமணியை நீக்கி விட்டோம். அவருடன் இருக்கும் கூட்டத்தினர், பொய் சொல்வதையே அரசியலாகக் கொண்டு செயல்படுகின்றனர்; என் மனம் புண்படும்படி ஏளனமாக பேசி வருகின்றனர்.


என்னை பற்றி மட்டுமில்லாமல், 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் வசை பாடுவதை தொழிலாக செய்து வருகின்றனர். அரசியலில் இருந்து என்னை ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், எதை எதையோ பேசுகின்றனர்.


தேர்தல் கமிஷன் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு, எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷனே வழக்கு போடுவது, வேடிக்கையிலும் வேடிக்கை. இதை கண்டு நீதிபதியே வியந்து விட்டார்.


டில்லி உயர் நீதிமன்றம் இரண்டு முறை எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக, அன்புமணி தரப்பினர் பொய்களை பரப்பி வருகின்றனர். தேர்தல் கமிஷன் சரியான திசையில் செல்லவில்லை; திரும்ப திரும்ப தவறு செய்கிறது. இதை, நீதிமன்றத்திலேயே சொல்லி விட்டோம். இதில், பா.ஜ.,வை குறை கூற விரும்பவில்லை.


பா.ம.க., உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி மிகவும் குழம்பி போய் இருக்கிறார்; இப்போது ஊடகங்களையும் குழப்பி வருகிறார். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி நாங்கள் பேசி வருகிறோம்; விரைவில் முடிவை வெளியிடுவோம். 'அய்யா பா.ம.க.,' என்ற பெயரில் கட்சி துவங்கப்பட்டது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.



-நமது நிருபர் --

Advertisement