காரில் 3 பவுன் நகை திருட்டு; தம்பதி மீது போலீசார் வழக்கு

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் நித்யாதேவி, 40, தனியார் பள்ளி ஆசிரியை. இவர், தன் தாயுடன் கடந்த, 1ம் தேதி, திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்ப, கார் உரிமையாளர்கள், அவ்வழியாக பயணிப்போருடன் செலவை பகிர்ந்து கொள்ளும் வகையிலான, 'ப்ளா ப்ளா கார்' ஆப்பில் புக் செய்துள்ளார். அதன்படி ஒரு கார், வாடகைக்கு கிடைத்துள்ளது. அதில், கார் உரிமையாளர் தன் மனைவியுடன் முன்னாள் அமர்ந்து கொள்ள, பின்னால் நித்யாதேவி, தன் தாயுடன் அமர்ந்திருந்தார்.

இரவு, 8:30 மணியளவில் பந்தாரப்பள்ளி அருகே, கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு ஓட்டலில் நிறுத்தி, அனைவரும் டீ குடித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, நித்யாதேவி பையில் இருந்த, 3 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இதையடுத்து அவர், டீ குடித்த ஓட்டல் அருகே உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை பார்த்தபோது, காரில் முன்னாள் அமர்ந்து வந்த பெண், தனியாக காருக்குள் சென்று வருவது தெரிந்தது. இதுகுறித்து நித்யாதேவி, குருபரப்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

விசாரணையில், கார் உரிமையாளர்கள், செங்கல்பட்டு மாவட்டம், வேப்பங்கரணையை சேர்ந்த யோகேஸ்வரன், 31, அவரது மனைவி கவிப்பிரியா, 31, என தெரிந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement