வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து ; எலக்ட்ரீஷியன் உட்பட 4 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பாலேக்குளியை சேர்ந்தவர் அருள்முருகன், 32, எலக்ட்ரீஷியன். கடந்த, 10ல், பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் மாலை, 6:30 மணியளவில் காவேரிப்பட்டணத்தில் இருந்து வேலம்பட்டி செல்லும் சாலையில் சென்றார். எதிரே வேகமாக வந்த ஸ்பிளண்டர் பைக் மோதியதில் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* சூளகிரி அடுத்த ஜோகிர்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 30, தொழிலாளி. இவர் கெம்பரசனப்பள்ளியை சேர்ந்த நாராயணன், 34, என்பருடன் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். பைக்கை நாராயணன் ஓட்டினார், இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மதியம், 1:45 மணியளவில் சப்படி அருகே ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி, எந்தவித சிக்னலும் போடாமல், 'யு டர்ன்' செய்தது. அதன் மீது பைக் மோதியதில் நாகராஜ் பலியானார். நாராயணன் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த தொட்டபூவத்தியை சேர்ந்தவர் வேலு, 50, தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். அட்டக்குறுக்கி பஸ் ஸ்டாப் அருகே ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த இன்னோவா கார் மோதியதில் பலியானார். சூளகிரி போலீசார், இன்னோவா காரை ஓட்டி சென்ற திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த சுந்தர், 40, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

*தேன்கனிக்கோட்டை அடுத்த ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 32. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் கழனிகொட்டாய் அருகே சென்றுள்ளார். அப்போது, முன்னால் சென்ற ஈச்சர் லாரி திடீரென திரும்பியதால், அதன் மீது பைக் மோதியதில் பலியானார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement