ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

20

புதுடில்லி: ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை லோக்சபாவில் மத்திய அரசு கொண்டு வராது என பார்லி விவகாரத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி மீதும், மத்திய அரசு மீதும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, எம்.பி., பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே வழங்கி உள்ளார். அவர் எம்.பி., பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.


இது ஏற்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. ராகுலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக பார்லி விவகாரத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விஷயத்தை அவையின் சிறப்புரிமைக் குழு, நெறிமுறைக் குழுவிற்கு அனுப்புவதா அல்லது நேரடியாக லோக்சபாவுக்கு கொண்டுவருவதா என்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசிக்கப்படும்.


இது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை அவைக்கு மத்திய அரசு கொண்டு வராது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

Advertisement