எந்த சூழலிலும் படிப்பை மட்டும் விட்டு விடாதீர்கள்!

திருப்பத்துாரில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும், 52 வயதான ரூபி:

காஞ்சிபுரம் மாவட்டம், ரெட்டிபேட்டை தான் என் சொந்த ஊர். அப்பா ராஜசேகரன் நேர்மையான வனத்துறை அலுவலர்; அந்த நேர்மைக்காகவே, எதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கருணை அடிப்படையில், அம்மாவிற்கு திருப்பத்துார் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், பதிவு எழுத்தர் வேலை கிடைத்தது. இதனால், குடும்பத்துடன் திருப்பத்துார் வந்துவிட்டோம்.

பள்ளி படிப்பின் போதே காதலிக்க ஆரம்பித்து, கவனத்தை சிதற விட்டேன். தடகள போட்டிகளில் விளையாடி இருந்தேன். கல்லுாரியில் படிக்கும் போது, தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்தனர்.

அதற்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. அதே சமயத்தில், வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, என் விருப்பமே இல்லாமல் நிச்சயம் செய்தனர்.

என் காதலர், பயிற்சி முகாம் நடக்கிற இடத்திற்கு வந்து என்னை கூட்டிச் சென்றுவிட்டார். நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

கணவர் வீட்டுக்கு வந்தபோது, பல விஷயங்களில் அவர் பொய் சொன்னது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பார்.

நான், இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்க்கையின் விளிம்பில் நின்றபோது, என் அம்மா வாங்கி வந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான விருப்ப மனு தான், என் வாழ்வின் திருப்புமுனை.

தினமும் அதிகாலை, 4:00 மணியில் இருந்து, 5:30 மணி வரை மைதானத்தில் கடினமாக பயிற்சி செய்து, அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். 1997ல், என் இரு குழந்தைகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு, ஆவடி பயிற்சி முகாமுக்கு சென்றேன்.

அடுத்தடுத்து, காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினேன். 2015ல் ஆம்பூரில் நடந்த ஒரு விபத்தில், என் கணவர் இறந்துவிட்டார்.

கணவரை பிரிந்த சமயத்தில், சக போலீசாரின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன். அதனால், என்னை அழகுபடுத்தும் எல்லா விஷயங்களையும் கைவிட்டேன். முடியை வெட்டினேன்; கம்மல் அணிய மாட்டேன்; பூ, பொட்டு வைக்க மாட்டேன்.

நேரம் கிடைக்கும் போது பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம், உணர்வுகளை கையாள்வது என, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

என் மகன்களை நல்ல முறையில் படிக்க வைத்துள்ளேன். எந்த சூழல் வந்தாலும், படிப்பை மட் டும் விட்டு விடாதீர்கள் என்பதே, இளம் தலைமுறையினருக்கு நான் விடுக்கும் கோரிக்கை!

Advertisement