காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

11


கவுகாத்தி: '' நாட்டை பிரிக்க நினைப்பவர்களை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது. இதனால் அக்கட்சியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி பேசினார்.


அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு நடந்த கூட்டத்தில் பேசியதாவது: இன்று, இந்தியாவுக்கு அவசர காலத்தில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலை மட்டும் கிடைக்கவில்லை. இது இந்தியா தனது பாதுகாப்புக்கு புதிய வழிகளை கண்டறிந்து வருகிறது என்பதற்கான சான்று ஆகும். இன்று புல்வாமா தாக்குதலின் 7 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா எப்படி தண்டித்தது என்பதை உலக நாடுகள் பார்த்தன. இதனால் சிலர் இன்னும் பயத்தில் உள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூரின் சக்தியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.


நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் முடிவு முடிவு எடுக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா ?முன்னர் அக்கட்சி அதனை செய்துள்ளதா? வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடும் ஆனால் ஒன்றும் செய்யாது. இந்தியாவை ஒரு நாடாக காங்கிரஸ் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

அன்னை இந்தியா என்றால் என்ன என அக்கட்சி கேள்வி எழுப்புகிறது. இந்தியாவின் நலனுக்கு அக்கட்சி ஒன்றும் செய்யவில்லை. அன்னை இந்தியா எனக்கூட காங்கிரஸ் சொல்லாது. அதற்கு மரியாதை கொடுக்காது. நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்தது இல்லை.


காங்கிரசின் எதிர்மறை எண்ணம் காரணமாக வடகிழக்கு மாநில மக்கள் பயத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வசித்தனர். நாட்டை எப்போதும் பயத்தில் வைத்து இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் எப்போது எல்லாம் ஆயுதங்கள் வாங்கப்படுகிறதோ அப்போது எல்லாம், கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும் இன்று ராணுவத்தை இந்தியா பலப்படுத்தி வருகிறது. மிகப்பெரிய நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் நவீன ஓடுபாதைகளை அமைத்து வருகிறது.


நாட்டை பிரிக்க நினைப்பவர்களையும், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைப்பவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அவர்கள், காங்கிரசின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக் நாட்டை பிரித்தது. தற்போது காங்கிரசானது, முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆக மாறிவிட்டது. இதனால், காங்கிரசிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டில்லி அல்லது அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சி அசாமை கைவிட்டு விட்டது.



அசாமின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும், பிரம்மபுத்ரா முக்கியமானதாக இருந்தது. ஆனால், காங்கிரசின் 70 ஆண்டு கால ஆட்சியில், இந்த நதியை கடப்பது பெரிய சவாலாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் அசாமின் வளர்ச்சி எப்படி சாத்தியம். 2014 ல் நாட்டிற்கு சேவை செய்ய உங்களால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2 - 3 ஆண்டுகளில் பாஜ தொண்டர்கள் இரட்டை இன்ஜீன் அரசை உருவாக்கினார்கள். இதனால், கடந்த 10 -11 ஆண்டுகளில் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசானது, பிரம்மபுத்ரா நதியில் 5 பெரிய பாலங்களை கட்டி உள்ளது. அசாமுக்கு காங்கிரஸ் தொந்தரவை மட்டும் கொடுத்தது. ஆனால், பாஜ தீர்வை வழங்குகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement