நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்

20


திருப்பத்தூர்: 'எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். நமது அதி வேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது; 2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் தான். திராவிட மாடல் 2.O ஸ்டார்ட் ஆகிவிட்டது. இது ஆணவத்தினால் சொல்லவில்லை. அரசின் சாதனைகள் மீது நம்பிக்கையில் சொல்கிறேன்.


ஸ்டாலின் கணக்கு






இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 75 ஆயிரம் பூத்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 350 ஓட்டுகளைப் பெற வேண்டும். இதை செய்தால், 2 கோடியே 60 லட்சம் ஓட்டுகள் வாங்கி விடலாம். இந்தத் தேர்தலில் 2.50 கோடி ஓட்டுகளுக்கு குறையாமல் வாங்கியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் 40 முதல் 50 ஓட்டுகளை திரட்டினாலோ, இலக்கை அடைந்து விடலாம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் நமது இலட்சியம். இந்தத் தேர்தலுக்குள் திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒரு வாக்காளரை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும்.

திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழகத்தின் வளர்ச்சி தொடரும். மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 கொடுத்து, நேற்று காலை 1.31 கோடி பெண்கள் முகத்தில் ஒருசேர புன்னகையை உருவாக்கினோம். ஆனால், தேர்தலைக் காரணம் கட்டி மகளிர் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்த முயற்சிகள் நடந்தன. பாஜவைச் சேர்ந்த ஒருவரை வைத்து, தேர்தல் சமயத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவும் மாட்டார்கள். நல்லது செய்ய விடவும் மாட்டார்கள்.


சர்ப்ரைஸூம்... ஷாக்கும்...





அதனால் தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். ஓர வஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் ஒரு முகம் இருந்தால், அதுதான் மத்திய பாஜ அரசு. இது வரைக்கும் தமிழகத்திற்கு ஏதாவது சிறப்புத் திட்டம் அறிவித்தார்களா? நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை பதில் அளிக்கவில்லை.

பாஜவின் கிளைக் கழகமாக மாறி விட்டது அதிமுக. இபிஎஸ் எனக்கு சவால் விட்டுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி சமூக வலைதளங்களில் வலம் வருபவர் இபிஎஸ். சட்டம் ஒழுங்கு பற்றி பேச உங்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் எல்லாம் மறக்கடித்து விட்டதா நினைத்து விட்டீர்களா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் சம்பவங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்து விட்டீர்களா? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது.


அதிவேக இன்ஜின்





திமுக அரசை அவதூறுகளால் களங்கப்படுத்தும் உங்களின் பேச்சுக்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் அரசை வடமாநில சேனல்கள் பாராட்டுகின்றன. திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். பாஜவின் டப்பா இன்ஜின் முன்பு, நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. மீண்டும் சொல்கிறேன், இந்த ஜனநாயகப் போரில் தமிழக அணியா? டில்லி அணியா?, இவ்வாறு அவர் கூறினார்.



@block_Y@

திமுகவுக்கு தாவல்



இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர் அஜீம் திமுகவில் இணைந்தார். வாணியம்பாடியைச் சேர்ந்த இவர், 2016 - 21 வரையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். block_Y




Advertisement