ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காரும், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது; ஜெய்ப்பூர் மாவட்டத்தின் கோட்டா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டிரக்கின் பின்புறத்தில் வேகமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நசுங்கியது. காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்

உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உஜ்ஜைனியில் உள்ள மாகாளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் ஜி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிரக் மீது பலமாக மோதியது. இதில், ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பலியானவர்கள் ரேஷ்மா ஸ்ரீவஸ்தவா, பியூஷ் ராய், ராகுல் ரஜக், ஷானு மற்றும் ஓட்டுநர் அனுராக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது, இவ்வாறு தெரிவித்தனர்.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement