காசா மறுசீரமைப்புக்கு ரூ.45 ஆயிரம் கோடி வழங்க அமைதி வாரியம் உறுதி: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: காசாவை மறுசீரமைக்கவும், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும் ரூ.45 ஆயிரம் கோடி வழங்க காசா அமைதி வாரியம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், கடந்தாண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அப்போது, 20 அம்சங்களுடன் கூடிய காசா அமைதி திட்டத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், காசாவில் அமைதியை ஏற்படுத்தவும், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் காசா அமைதி வாரியத்தை அமைத்தார்.

அதிபர் டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்தில் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல் உள்பட ஏராளமான 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணையவில்லை. இந்த வாரியத்தை ஐநா பாதுகாப்பு சபை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், : காசாவை மறுசீரமைக்கவும், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும் ரூ.45 ஆயிரம் கோடி வழங்க காசா அமைதி வாரியம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது; அமைதி வாரியம்: கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான திட்டத்தை நான் வெளியிட்டேன். எங்களது தொலைநோக்குப் பார்வையை ஐநா பாதுகாப்பு சபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த உலக அமைதிக்காகவும், ஒரு துணிச்சலான திட்டத்தை முன்வைத்தோம். வரும் பிப்ரவரி 19ம் தேதி இந்த அமைதி வாரியத்தில் மேலும் உறுப்பினர்கள் இணைய உள்ளனர். அங்கு, அமைதி வாரியத்தின் உறுப்பு நாடுகள், காசா மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக 45 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை வழங்க முன்வந்துள்ளதை அறிவிப்போம். மேலும், காசா மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்காக, ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட சர்வதேச படை மற்றும் உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement