இண்டி கூட்டணியின் தலைவராக தகுதியானவர் ஸ்டாலின்தான்; மணிசங்கர் அய்யர் கருத்து

63

திருவனந்தபுரம்: இண்டி கூட்டணிக்கு தலைவராக தகுதி உள்ள நபர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

நேருவுக்கு பின்னர் பிரதமராகும் வாய்ப்பை பெற்றவர் காமராஜர். ஆனால் அவர்(காமராஜர்) எனக்கு ஆங்கிலமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது பிறகு எப்படி என்று மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதே போன்ற சூழலில் தான் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

நாட்டின் பிரதமராக ராகுல் வருவதற்கு, கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கு ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பி வருபவர் அல்ல. கடந்த ஓராண்டாக அவர் பேசி வரும் ஒவ்வொரு விஷயமும், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

நாட்டுக்கு தேவையான உண்மையான பிரச்னைகளை மட்டுமே கையில் எடுக்கிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலின் துணை நிற்பார். அவரால் கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும், தலைவராக இருக்க தகுதியானவர் அந்த திறன் ஸ்டாலினிடம் மட்டுமே இருக்கிறது. அவர் திறமையாக செயல்படுவார்.

ராகுல் பிரதமராக வருவதற்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார் என்ற பெரிய நற்பண்பு ஸ்டாலினிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன். பின்னால் இருந்து கூட்டணியை தாங்கி பிடிப்பார்.

இன்று காங்கிரஸ் கட்சியில் வெற்றிக்கான பயணம் இருப்பதாக தெரியவில்லை. கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள் கட்சியை வளர்க்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. காங். பொதுச் வசயலாளர் கே.சி. வேணுகோபால் ஒரு ரவுடியை போன்றவர். அவரால் கட்சியை வளர்க்க முடியாது. அவரை படேல் போன்று முன்னிறுத்தும் காங்கிரால் எப்படி வெற்றி பெற முடியும். காங்கிரசானது முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மணிசங்கர் அய்யர் பேசினார்.

ஆனால் அவரது பேச்சை பொருட்படுத்த வேண்டியது இல்லை, அவர் காங்கிரசிலும் இல்லை என்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

Advertisement