சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியா: கேரள அமைச்சர் மழுப்பல்

11


திருவனந்தபுரம்: சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு கேரள அரசு இன்னும் ஆதரவு அளிக்கிறதா என்பது குறித்து தெளிவான பதிலை கூற அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மழுப்பலான பதிலை கூறினார்.


சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கடந்த 2018 ம் ஆண்டு அளித்த தீர்ப்பை, மறு சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,இன்று வழக்கை ஏப்ரல் 7 ம் தேதி முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்து உள்ளது.


இந்நிலையில் கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜிவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஐய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இன்னும் கேரள அரசு ஆதரவு அளிக்கிறதா? இல்லையா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு நேரடியாக பதிலளிக்காத அமைச்சர் ராஜிவ், பெண்கள் நுழைவது போன்ற பிரச்னைக்குள் செல்வதற்கு முன்பு, அரசியல் அமைப்பு ரீதியாக சுப்ரீம் கோர்ட் முதலில் தீர்மானிக்கட்டும்,' என மழுப்பலான பதிலைத் தெரிவித்தார்.

மேலும் அவர், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழையாமல் இருப்பது என்பது நீண்ட கால பாரம்பரியம். இந்த பிரச்னையை ஆய்வு செய்ய ஹிந்து மதத்தை சேர்ந்த அறிஞர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளை கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என முன்மொழிந்தோம். ஆனால், சுப்ரீம் கோர்ட், அதிகாரி ஒருவரை நியமித்தது. பிறகு அனைத்து வயது பெண்களையும் உள்ளே அனுமதித்தது. நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை தான் அமல்படுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement