பிப் 25-26ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி; 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயணம்

3

புதுடில்லி: பிப்ரவரி 25 முதல் 26 வரை பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடியின் பயணம் அமைய உள்ளது. பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய அம்சங்கள் குறித்து இருவரும் விரிவாக கலந்து பேச உள்ளனர்.

மேலும், இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மோடியின் வருகை குறித்த செய்தியை முதலில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல் இந்தியா இடையே மிக பெரிய கூட்டணி உருவாகிறது. இந்தியா மிகவும் சக்திவாய்ந்த நாடு என்றார்.

வருகை தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேலிய பார்லிமெண்டில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, தமது 3வது ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisement