எங்களுக்கு தி.மு.க., அரசு பங்கு கொடுக்கிறது: முஸ்லிம் லீக்

44

சென்னை: ''சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் ஐந்து தொகுதிகளை கேட்டு பெறுவோம்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.


சென்னை ராயபுரத்தில், முஸ்லிம் லீக் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்திற்கு பின், காதர் மொய்தீன் அளித்த பேட்டி:

தமிழகம் முழுதும் 8,000 மகஹாலா ஜமாத்துகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண் அனைவரும், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் ஒட்டுமொத்தமாக ஓட்டளிப்பர்.


தமிழகத்தில் 40 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. அதன் அடிப்படையில், கடந்த 2011ல் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை வழங்குமாறு கோரினோம். அதன்படி தி.மு.க., கூட்டணியில் வழங்கினர். அதில், முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது.


வரும் சட்டசபை தேர்தலுக்காக, 20 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம். அதில், ஐந்து தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்கு பெற்று ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்.



ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. ஏனெனில், தி.மு.க., அரசு எங்களுக்கு அனைத்திலும் பங்கு கொடுக்கிறது.


பங்கு கொடுக்காமல் எங்களை ஒதுக்கவில்லை. காங்கிரசில் ஒரு சிலர், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர். இதை, அக்கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதா என
தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement