அறுவடையின் போது வயல்களில் குவியும் வெள்ளை கொக்குகள்

​திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடக்கும் நிலையில், இயந்திரங்களின் பின்னால் அணி வகுக்கும் கொக்குகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தற்போது பயிர்கள் நன்கு விளைந்து முற்றிய நிலையில் இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அறுவடை இயந்திரங்கள் வயலில் இறங்கி நெற்பயிர்களைச் சரிக்கும் போது அடி மண்ணில் மறைந்திருக்கும் சிறு பூச்சிகள் மற்றும் புழுக்கள் வெளியேறுகின்றன. இவற்றைக் கொத்தி தின்பதற்காக ஏராளமான கொக்குகள் வயல்களில் குவிகின்றன.

இயந்திரம் முன்னே செல்ல அதன் பின்னால் எழும் துாசியையும் பொருட்படுத்தாமல் கொக்குகள் போட்டி போட்டுக்கொண்டு பூச்சிகளை வேட்டையாடுகின்றன. வயல் வெளிகளில், பால் போன்ற வெண்ணிறத்தில் கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதும், இயந்திரம் நகரும் திசைக்கேற்ப அவை பறந்து செல்வதும் காண்போரை பரவசப்படுத்துகிறது.

விவசாயிகள் கூறுகையில், ஆட்கள் மூலம் அறுவடை நடந்த போது கொக்குகள் வருவது குறைவாக இருக்கும். இப்போது மிஷின் சத்தம் கேட்டாலே கொக்குகள் குவிகின்றன என்றனர்.

Advertisement