எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்

8

சென்னை: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எத்தனை முறை பிரசாரத்திற்காக தமிழகம் வந்தாலும் மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி;

தேர்தல் கமிஷன் யாரால் இயங்குகிறது, யாரால் இயக்கப்படுகிறது என்று தெரியும். சுதந்திரமான முறையில் தேர்தல் கமிஷன் இயங்க வாய்ப்பு இல்லை. அவர்கள் சொல்வதை இவர்கள்(தேர்தல் கமிஷன்) கேட்கிறார்கள். பீஹார், ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் பார்த்தோம்.

எல்லா மாநிலங்களிலும் தேர்தல் கமிஷன் எப்படி செயல்படுகிறது என்று எங்கள் கட்சியின் தலைவர்கள் கூறிவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் யார் யார் எல்லாம் தேர்தல் கமிஷனில் இப்படி செயல்படுகிறார்களோ அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உரிய தண்டனை வாங்கி தருவோம் என்று கட்சி தலைமை ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன், வெளிப்படையாக இயங்க வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிப்.22ம் தேதி நடக்கும், கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்.

பிரதமர் மோடி, அமித்ஷா இருவருக்கும் ஒரு பயம் உள்ளது. தமிழகத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்று எதிர்பார்க்கிறார்கள். 2 முறை, 4 முறை அல்ல... 400 முறை வந்தாலும் தமிழகத்தில் அவர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

தமிழக மண், சமூக நீதிக்கான மண். தமிழக மக்கள், வாக்காளர்கள் புத்திசாலிகள். எளிதாக பாஜ இவர்களை ஏமாற்ற முடியாது. திரைமறைவில் பாஜவில் ஒளிந்துகொண்டு அதிமுக பாஜ திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். இதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் குறித்து இபிஎஸ் பேசி வருகிறார். பொள்ளாச்சியில் என்ன நடந்தது? அங்கு பெண்கள் எப்படி வன்புணர்வுக்கு ஆளானார்கள்? இந்த சம்பவத்தை செய்தது யார்? எத்தனை அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்? அவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தார்கள்? என்று பொள்ளாச்சி சம்பவம், வாச்சாத்தி சம்பவத்தை சொல்லிவிட்டு அதன் பின்னர் இபிஎஸ் பேசட்டும்.

இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

Advertisement