ரவி நதியில் அணை கட்டும் இந்திய திட்டம் மார்ச்சில் நிறைவு: பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி

4


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாயும் ரவி நதியின் உபரிநீர் பாகிஸ்தானுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் விதமாக, புதிதாக கட்டப்பட்டு வந்த ஷாபூர் கண்டி அணைக்கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தியது. ரத்தமும் நீரும் ஒன்றாக பாய முடியாது என்று பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளின் குறுக்கே நீர்மின் திட்டங்கள், அணை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருப்பினும், இந்தியா தனது இறையாண்மை மற்றும் உரிமையின் அடிப்படையில் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

செனாப் நதியில் நீர்மின் திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஜீலம் நதியின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த வுலர் அணைக் கட்டுமானப் பணிகளையும் இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது. அதேபோல, ரவி நதியின் உபரி நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக, கட்டப்பட்டு வந்த ஷாபூர் கண்டி அணைக் கட்டுமானப் பணியும் மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடைய உள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் முதல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த உபரிநீர் குறைந்துவிடும்.

இதனால், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கப் போகிறது.

போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததால் ரவி நதியின் உபரி நீர் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்தது. தற்போது, புதிய அணையின் மூலம், ரவி நதியின் உபரிநீர், ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட இருக்கிறது.

Advertisement