ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும்; பிரதமர் மோடி உத்தரவாதம்

2

புதுடில்லி: ''ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தில் மக்கள் திறனை மேம்படுத்துவதில் அரசு முதலீடு செய்து வருகிறது'' என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்து உள்ளார்.




டில்லியில் பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப் 20ம் தேதி வரை 5 நாட்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.


இந்த சூழலில் இளைஞர்கள் மத்தியில் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் சூழல் உருவாகிவிடுமோ என்ற கவலை நீடிக்கிறது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி இளைஞர்களுக்கு தெம்பூட்டும் வகையில் பேசி இருக்கிறார்.

பிரதமர் மோடி கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தில் மக்கள் திறனை மேம்படுத்துவதில் அரசு முதலீடு செய்து வருகிறது. எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பது தான் பயத்திற்கு மாற்றுவழி.



புதுமை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் வேலைகளை அழிக்கும் என்ற அச்சம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும், புதுமை நிகழும் போதெல்லாம், புதிய வாய்ப்புகள் உருவாகின்றன என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது.

தயார்




செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் இதுவே நிகழும். அதே நேரத்தில் இந்த மாற்றத்திற்கு ஏற்ப இந்தியா ஏற்கனவே நன்கு தயாராக உள்ளது. டிஜிட்டல் மாற்றத்தைத் தொடர்ந்து சில வேலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement