மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு

அமராவதி: மஹாராஷ்டிராவில் ஆட்டோ - பஸ் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி மாவட்டத்தில் ரஜூரா பஜார் பகுதியில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் ஆட்டோ ஒன்றும் வந்து கொண்டு இருந்தது. இவ்விரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 10ம் வகுப்பு மாணவி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தை அறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் தாங்களாகவே மீட்பு பணிகளில் இறங்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று பஸ் டிரைவரிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்தினர். முழு விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Advertisement