ஏஐ துறையில் இந்தியா காட்டும் மகத்தான நம்பிக்கை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் பாராட்டு

1


புதுடில்லி: வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மேற்கத்திய நாடுகளில் குழப்பம் காணப்படும் நிலையில், அதில் இந்தியா மகத்தான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது, என பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் பாராட்டி உள்ளார்.



டில்லியில் ' ஏஐ காலத்தில் நிர்வாகம்: இறையாண்மை, தாக்கம் மற்றும் பிராந்தியம்' தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் ரிஷி சுனக் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏஐ குறித்து பல்வேறு வகையான பார்வைகளை காண்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், மகத்தான நம்பிக்கை மற்றும் உறுதி காணப்படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஏஐ குறித்து குழப்ப நிலை நிலவுகிறது.


இந்த இடைவெளியை நிரப்புவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையை வளர்க்க கொள்கை முடிவுகள் தேவை. நம்பிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வது என்பது உலக தலைவர்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கொள்கை முடிவு



இதனைத் தொடர்ந்து டில்லியில் நடக்கும் ஏஐ மாநாட்டில் ரிஷி சுனக் பேசியதாவது: தொழிலாளர் சந்தையை ஏஐ மாற்றப்போகிறது. சில வேலைகள் காணாமல் போகும். வேறு சில வேலைகள் மறுவடிவம் பெறும். புதுமை புகுத்துவதோடு மட்டும் அரசின் பணி முடிந்துவிடாது. இந்த புதிய பணியை நம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் எடுத்துக் கொள்வதற்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த மாற்றத்தை திறம்பட சமாளிக்கும் வகையில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை போக்க வேண்டும் என பேசினார்.

Advertisement