இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு

36

நமது டில்லி நிருபர்

மக்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான தமிழ்நாடு தொடர்பான மின் வாரிய வழக்கு இன்று (பிப்ரவரி 19) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நாடு முழுவதும் வழங்கப்படக்கூடிய இலவசத் திட்டங்கள் தங்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* இலவச மின்சாரம் என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் கொடுத்து வருகிறீர்கள் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தை பெறுகிறார்கள்?

* இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இத்தகைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

* நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் இலவசங்களை வழங்குகின்றன.

* இப்படி செய்வதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. அனைவருக்கும் இலவச உணவு, இலவச மிதிவண்டிகள் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநிலங்கள் பாடுபட வேண்டும்.

* இந்தியாவில் நாம் என்ன மாதிரியான கலாசாரத்தை வளர்த்து வருகிறோம்?

* அரசின் சலுகைகளை பெறத் தகுதியானவர்கள் மட்டுமின்றி அனைத்து தனிநபர்களும் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

* 100 யூனிட் மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது?

* அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற இலவச அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement