கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்

விசாகப்பட்டினம்: கடலோரப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்று சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் கடற்படையின் மிலன் என்ற கூட்டுப் பயிற்சி நேற்று (பிப்ரவரி 20) துவங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் 19 நாடுகளைச் சேர்ந்த போர் கப்பல்கள் இணைந்து செயல்பட உள்ளனர். விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த துவக்க விழாவில், 74 நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடலோரப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; கடல்சார் பாதுகாப்பில் நிலவும் வழக்கமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கடல் கொள்ளை, கடல்சார் பயங்கரவாதம், சட்டவிரோத மீன்பிடிப்பு, கடத்தல், சைபர் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற புதிய சவால்களும் இணைந்துள்ளன. அதேவேளையில், காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. இதனால், மனிதாபிமான உதவிகளும், பேரிடர் மீட்பு பணிகளும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே, கடலோரப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement