தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

1


சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.


அதன் அறிக்கை: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும். தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 22) கனமழை பெய்யக்கூடும்.



வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இன்று (பிப்ரவரி 21) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement