ஏஐ மாநாட்டில் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது; காங். மீது பாய்ந்த மத்திய அமைச்சர்

9

புதுடில்லி: ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டித்துள்ளார்.

புதுடில்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

டில்லியில் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் சிறப்பாக செயல்படுவதாக புகழ்ந்து பேசினர். இது பெருமைக்குரிய தருணம். பிரதமர் மோடி தலைமையில் உலக நாடுகளை இந்தியாவின் தலைமையின் கீழ் கொண்டு வர வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முக்கிய நபர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால், அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒரு அவமானகரமான செயலை செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எத்தனை கண்டனங்கள் முன்வைத்தாலும் போதாது.

அவர்கள் செய்தது தவறு அல்ல, ஒரு குற்றம். காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக செய்த ஒரு செயல். நாட்டை பற்றிய சிறிதளவேனும் அக்கறை இருந்திருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்து மன்னிப்பு கேட்கும் என்று நம்பினோம்.

ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பதில், நியாயப்படுத்தி இது கோபத்தின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர். உலக நாடுகள் முன், நம் நாட்டை அவமானப்படுத்த கோபத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினால் அதைவிட வெட்கக்கேடானது என்று எதுவும் இருக்க முடியாது.

இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.

Advertisement