'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு

3


சென்னை: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்த பின்பே, தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து சொல்ல முடியும்,'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி: அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது; நிரந்தர எதிரியும் கிடையாது. இதை சொல்லிக் கொடுத்ததே, முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை, அவருடைய தே.மு.தி.க., - தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தற்போது, கூட்டணி அமைத்துள்ளது; இது பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. அது அவர்களின் விருப்பம்.

தற்போதைய சூழலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பார்த்தால், மிகவும் பாவமாக உள்ளது. தன்னை யாராவது சேர்த்துக்கொள்வரா என, முயற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் தற்போதையே கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அடுத்து ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக மாற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொய் சொல்லலாம், அதற்காக வாய்க்கு வந்தபடி பொய் சொல்லக்கூடாது.

தி.மு.க., - காங்கிரஸ் இடையே பிரச்னைகள் உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், காங்கிரசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதனால், காங்கிரசுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்த பின்பே, தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து சொல்ல முடியும். சீட் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் தேர்தல் வேலையைப் பார்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement