டிரம்பின் வரிவிதிப்பை ரத்து செய்த கோர்ட்; பின்னணியில் இந்தியர்

9

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வந்த வரி விதிப்பை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பின் பின்னணியில் வம்சாவளி இந்தியர் இருப்பது பலரும் அறிந்திடாத உண்மையாகும்.



அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளை கூடுதல் வரி என்ற பெயரில் மிரட்டி பணிய வைத்து வந்தார். அவரது இந்த மிரட்டலுக்கு ஏராளமான நாடுகள் அடிபணிந்தன. இதனால், அமெரிக்காவுடன் வர்த்தக உறவு வைக்க பல நாடுகள் தயக்கம் காட்டி வந்தன. இது அமெரிக்கர்களையும் வெகுவாக பாதித்தது.

எனவே, டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், வரி விதிப்பு நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது டிரம்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உலக நாடுகளே கொண்டாடும் விதமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின் பின்னணியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் கத்யால் என்ற வழக்கறிஞர் ஆற்றிய திறமையான வாதங்கள் தான் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

"அமெரிக்க அரசியலமைப்பின் படி, வரி விதிக்கும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது. சிறு வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வரிகள் சட்டவிரோதமானவை," என்ற வாதத்தை நீல் கத்யால் முன்வைத்தார். இதனை நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளனர். டிரம்ப் நியமித்த மூன்று நீதிபதிகளில் இருவர் அவருக்கு எதிராகவே வாக்களித்தது தான் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு நீல் கத்யால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "அதிபர்கள் சக்திவாய்ந்தவர்கள் தான். ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு அவர்களை விடவும் வலிமையானது," என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த நீல் கத்யால்?





1970ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நீல் கத்யால் பிறந்தார். இவரது தாய் பிரதிபா (டாக்டர்), தந்தை சுரேந்தர் (இன்ஜினியர்) இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். டார்ட்மவுத் கல்லூரி மற்றும் யேல் சட்டப் பள்ளியில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இவர், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் தற்காலிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர். சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

Advertisement