இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

1


புதுடில்லி: நாளை (பிப்ரவரி 23) நடப்பதாக இருந்த இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியுடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதையடுத்து, இரு நாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்து அதிபர் டிரம்ப் உத்தரவை வெளியிட்டார்.

தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 23) முதல் 3 நாட்கள் வாஷிங்டனில் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த சூழலில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிற நாடுகள் மீது விதித்து வந்த வரி உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், இறக்குமதி பொருட்களுக்கான வரியை 10 முதல் 15 சதவீதம் மட்டுமே விதிக்க முடியும். இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களை இரு நாடுகளும் ஆய்வு செய்த பிறகு, மற்றொரு தேதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement