நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்

ஹைதராபாத்: நக்சல் அமைப்பின் முக்கிய தளபதி தேவ்ஜி தெலங்கானா போலீஸில் இன்று சரணடைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மார்ச் 31ம் தேதிக்குள் ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, மத்திய ரிசர்வ் படையினரும், போலீசாரும் இணைந்து நக்சல்களை வேட்டையாடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல முக்கிய நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமானோர் போலீசார் முன்பு சரணடைந்துள்ளனர். அப்படி சரணடைபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நக்சலைட் அமைப்பின் முக்கிய நிர்வாகியும், உயர்மட்ட தளபதியுமான திப்பிரி திருப்பதி எனும் தேவ்ஜி சரணடைந்துள்ளதாக தெலங்கானா போலீஸ் உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவருடன் சேர்ந்து மூத்த நக்சல் தலைவரான மல்லா ராஜி ரெட்டி மற்றும் பலரும் சரணடைந்துள்ளனர்.

62 வயதான தேவ்ஜி தெலங்கானாவின் ஜகித்யால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2025 மே மாதம் காலமான நம்பலா கேசவ ராவ் எனும் பசவராஜூவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றதாக சொல்லப்படுகிறது.

Advertisement