தேர்தலுக்காக இலவச திட்டங்கள்; கடிவாளம் போடுவது அவசியம்!

2

லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என சமீப ஆண்டுகளாக எது நடந்தாலும், அதற்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் அரசியல் கட்சிகள், இலவசங்களை அறிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலின் போது கூட, கவர்ச்சி அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டதை அனைவரும் அறிவர்.


தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள், இப்போதே இலவசங்களை அறிவிக்க துவங்கி விட்டன. சமீபத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு பஸ்களில் ஆண்களுக்கும் இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்' என அறிவித்தார்.



அ.தி.மு.க.,வின் இந்த அறிவிப்பால், தேர்தலில் தங்கள் கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சியதோ என்னவோ, உடனே மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை 2,000 என 5,000 ரூபாயை, தமிழக அரசு யாரும் எதிர்பாராத வகையில் மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தி, அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இச்சூழ்நிலையில், தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தேர்தல் சமயத்தில் இலவச திட்டங்களை அறிவித்து, தாராளமாக செலவு செய்வதும், வளர்ச்சி பணிக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிடாமல், இலவசங்களுக்காக செலவிட்டு, கஜானாவை காலி செய்வதும் என்ன கலாசாரம்' என கேள்வி எழுப்பியது.


அது மட்டுமின்றி, 'சம்பளம் வழங்குவது, இலவசங்களுக்காக பணத்தை வாரி இறைப்பது என, இரண்டு வேலைகளை மட்டுமே அரசு செய்தால், அது சரியாக இருக்குமா; இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டே இருந்தால், மக்கள் வேலை செய்வரா? மாநிலத்தின் கடன் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி தடைபடாதா' என்றும் விமர்சித்தது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த கேள்விகள் சரியானவையே என்பதை நாட்டின் நலனில் அக்கறையுள்ள பலரும் ஒப்புக் கொள்வர். தமிழகத்தில் இலவசங்களை வாரி வழங்கி வருவதால், மாநிலத்தின் கடன் சுமை 9.52 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது.


தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணம் கொடுக்கும் கட்சிக்கே ஓட்டு என்ற மனநிலைக்கு மக்கள் மாறி வரும் சூழலில், இலவசங்களை அறிவிப்பதும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.


மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, முதலில் இலவசங்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியிட்ட இலவச அறிவிப்புகளால், அந்தக் கட்சியும் தன்னை மாற்றிக் கொண்டது.


கடந்த ஆண்டு பீஹார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அந்தக் கட்சி இடம் பெற்றிருந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு, 1 கோடி பெண்களுக்கு, தலா, 10,000 ரூபாயை வழங்கியது.


சில மாநில அரசுகள் இலவசங்களுக்காக மட்டும், ஒரு ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறிப்பிட்ட சதவீதம் வரை செலவிடுவதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கல்வி, பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு செலவிடுவது குறைகிறது. எனவே, இலவசங்கள் அறிவிப்பு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் கடிவாளம் போட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.


இல்லையெனில், ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக அல்லது அதை தக்கவைப்பதற்காக, இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவது, தொடர்ந்து கொண்டே இருக்கும்.


மொத்தத்தில், இலவசங்கள் என்பது ஏழை குடும்பங்களை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கவும், சுகாதார திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன், இலவசங்கள் தொடர்பான தேர்தல் முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது அவசியம்.

Advertisement