கடன் வாங்க கூட்டுறவு சங்கங்களை நோக்கி படையெடுப்பு தேர்தல் நெருங்குவதால் ஆர்வம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நெருங்குவதால் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நிதி இல்லாததால் கடன் கொடுக்க வழியின்றி சங்கங்கள் பல திண்டாடி வருகின்றன.

மாவட்டத்தில் 187 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அளவில் கூட்டுறவு கடன் சங்கங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டும், குறிப்பாக ஒரு சில கடன் சங்கங்கள் தவிர மற்ற அனைத்தும் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் நகைகள், பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்து ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் கடன் வாங்குவதற்காக விவசாயிகள், விளைநிலங்களை மட்டும் வைத்திருப்போர் என சங்கங்களில் உறுப்பினராக உள்ள பலர் கூட்டுறவு சங்கங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் எந்த சங்கங்களும் நிதி வளத்தோடு இல்லை. எல்லோரும் இப்போது தான் பயிர்க்கடன் கொடுத்து ஓய்ந்துள்ளனர். 2025-26 நிதியாண்டில் ரூ.245 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் தற்போதைய துணை முதல்வரான உதயநிதி, ஒரு பிரசாரத்தில் மக்களை பார்த்து, நகையை கொண்டு போய் சங்கங்களில் வையுங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்கிறோம் என கூறினார். அவர் கூறியதை நம்பி பலர் வைத்தனர். இது போன்ற ஒவ்வொரு ஆட்சி காலத்தின் தொடர் தள்ளுபடிகளாலும், வர வேண்டிய வட்டிமானியங்கள் கிடைக்காததாலும் தான் சங்கங்கள் நிதியின்றி தத்தளிக்கின்றன.

இந்நிலையில் இந்தாண்டும் யாராவது தள்ளுபடி அறிவித்தால், சங்கங்கள் இன்னும் திண்டாடும் நிலையை நோக்கி நகரும். இதை உணராமல் இன்னும் பலர் கடன் கேட்க தினமும் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

Advertisement