காங்.,கிற்கு 27 பிளஸ் 1 கொடுக்க தி.மு.க., திட்டம்

3

'சட்டசபை தேர்தலில், 27 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும். இதுவே இறுதி வாய்ப்பு' என, தமிழக காங்கிரசுக்கு, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.


ஆனால், எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், வேணுகோபால் டில்லி திரும்பி விட்டார். இதையடுத்து, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, 41 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



அதற்கு, 27 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் ஒதுக்க முதல்வர் முன்வந்திருப்பதாக கனிமொழி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், 'கடந்த 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒன்பது தொகுதிகளிலும் அக்கட்சி, வெற்றி பெற்றது. வரும் சட்டசபை தேர்தலில், ஒன்பது லோக்சபா தொகுதிகளுக்கு தலா மூன்று சட்டசபை தொகுதிகள் வீதம், 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதுவே இறுதி வாய்ப்பு; அதை ஏற்று உடன்பாட்டுக்கு வருமாறு தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது' என்றனர்.



- நமது நிருபர் -

Advertisement