தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்

1

பாங்காக்: தாய்லாந்தில் மிகவும் பிரபலமான 'டைகர் கிங்டம் சியாங் மாய்' பூங்காவில் வைரஸ் நோய் பரவி வரும் நிலையில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வடக்கு தாய்லாந்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் ஏராளமான புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான பூங்காவில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சுமார் 72 புலிகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை டைகர் கிங்டம் பூங்காவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதமாகும்.


ஆரம்பத்தில் 'பெலைன் பார்வோவைரஸ்' என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு நடத்தப்பட்ட சோதனையில், புலிகளுக்கு தொற்றியிருப்பது 'கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' பாதிப்பு என தெரிய வந்துள்ளது. இது விலங்குகளிடையே வேகமாகப் பரவக்கூடியது என்றும், ஆனால் மனிதர்களுக்குப் பரவாது என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.


ஆரோக்கியமில்லாத வேக வைக்காத கோழி இறைச்சியை புலிகளுக்கு வழங்கியதே இந்த வைரஸ் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என பூங்கா அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


தொடர்ந்து, பூங்கா 14 நாட்களுக்கு மூடப்பட்டு, கிருமிநாசினி தெளித்தல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சியிருக்கும் புலிகள் நலமாக இருப்பதாகவும், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து பீட்டா ஆசியா மற்றும் தாய்லாந்து வனவிலங்கு நண்பர்கள் அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement