தொழில்துறையினர் முதலீடு, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி: முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


'விக்சித் பாரத்துக்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி' என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அதில் அவர் பேசியதாவது: அரசு மற்றும் தொழில்துறையுடன் அறிவுசார் கூட்டாளிகள் ஒன்றிணையும்போது, சீர்திருத்தங்கள் நல்ல முடிவுகளாக மாறுகின்றன. அதேபோல, காகிதத்தில் உள்ள அறிவிப்புகள் நிஜத்தில் சாதனைகளாக உருவெடுக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், உள்கட்டமைப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.


11 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதனச் செலவு, 2026-27 மத்திய பட்ஜெட்டில் ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.


முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்துறையினர் ஈடுபட வேண்டும். அதேபோல, நிதி நிறுவனங்கள் நடைமுறை தீர்வுகளை வழங்கவும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவ வேண்டும். வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த நாம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement