ஈரான் மீதான தாக்குதலுக்கு ரகசிய அறிக்கை காரணமா?

6

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில், ஒரு ரகசிய அறிக்கை இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க துணை அதிபர், ஜே.டி.வான்ஸ், கடந்த 25ம் தேதி வெளியிட்ட ஒரு தகவலில், ஈரான் தன் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக மீண்டும் கட்டமைக்க துவங்கிவிட்டதற்கான ஆதாரங்களை, அமெரிக்கா கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகுதான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணை உற்பத்தியை, ஈரான் துவக்கியுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையும், நேற்று முன்தினம் வழங்கிய ஒரு ரகசிய அறிக்கையில், ஈரான் தன் அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றும், யுரேனியம் எங்கு, எவ்வளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை, தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தது.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஜெனிவாவில் நடந்த ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சின்போது, யுரேனியம் இருப்பை அதிகரிக்க மாட்டோம் என ஈரான் உறுதியளித்தாலும், மறுபுறம் தன் ஏவுகணை திட்டங்களை குறைக்கவும் மறுத்துவிட்டது.

ஈரானின் இந்த அணுகுமுறை, நேரத்தை கடத்துவதற்காகவே பேச்சு நடத்துகின்றனர் என்ற இஸ்ரேலின் வாதத்தை உறுதி செய்வதாக அமைந்தது. இதுவே அமெரிக்கா போரை துவங்குவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்தது என கூறப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ அமைச்சகம், 'இந்த தாக்குதல் திடீரென நடத்தப்பட்டது அல்ல. இது பல மாதங்களாக திட்டமிடப்பட்டு, சில வாரங்களுக்கு முன் தாக்குதலுக்கான தேதி அமெரிக்காவால் இறுதி செய்யப்பட்டது' என தெரிவித்துள்ளது-.

பேச்சு ஒருபுறம் நடந்தாலும், ராணுவ நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement