பகவத் கீதை, துளசி மாடத்தை சுமந்து மகாராஷ்டிரா பெண்கள் ஊர்வலம்


சேலம்: மராட்டிய சமூக மக்களின் குருவான, 'ஞானேஸ்வரி' தேவி ஜெயந்தி விழாவை, சேலத்தில் வசிக்கும் மகாராஷ்டிரா மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அதன்படி, 12ம் ஆண்டாக, செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் கடந்த, 21ல் ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து, தேவி உருவத்தை மலர்களால் அலங்கரித்து, அதற்கு முன் பாரம்பரிய வீணையை, ஒருவர் மாற்றி ஒருவர் இடைவிடாது இரவு பகலாக கடந்த, 6 நாட்களாக இசைத்து, பக்தி பாடல்களை பாடி வந்தனர்.


அதன் நிறைவு நாளான நேற்று காலை, அங்கு திரண்ட சேலம் வாழ் மகாராஷ்டிரா மக்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த அச்சமூக மக்கள், பகவத் கீதை, துளசி மாடங்களை வைத்து பூஜை செய்து, தொடர்ந்து சுமந்தபடி, நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் சென்றனர். இதில் பெண்கள், அவர்களின் கலாசார உடை அணிந்து சென்றனர். மீண்டும் மண்டபத்தை அடைந்து, அங்கு சிறப்பு பூஜை செய்து, பகவத் கீதை, துளசி மாடங்களை அவரவர் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் ஒரு வாரமாக, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேலம் வாழ் மகாராஷ்டிரா மாநில மக்கள் செய்திருந்தனர்.

Advertisement