வர்த்தக துளிகள்

'ஹைபா' துறைமுகத்துக்கு பாதிப்பில்லை: அதானி குழுமம்




ஈ ரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் உள்ள தங்களது 'ஹைபா' துறைமுகம் பாதுகாப்பாக இயங்கி வருவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

Tamil News

துறைமுகத்தின் ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் ஹைபா உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை ஈரான் நடத்தியது.

எனினும், இந்த தாக்குதல்களால் தங்களது துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து நிறுவனம் எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

தற்போதைய சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி துறைமுகம் செயல்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.


'கெய்ல்' புதிய தலைவராக தீபக் குதா பொறுப்பேற்ப்பு





பொதுத்துறையை சேர்ந்த, 'கெய்ல்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, தீபக் குப்தா பொறுப்பேற்று கொண்டார்.

நாட்டின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வினியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான இதன் தலைவராக செயல்பட்டு வந்த சந்தீப் குமார் குப்தாவின் பதவிக்காலம், கடந்த 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தீபக் குப்தா, வரும் 2029 பிப்ரவரி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரவியல் பொறியாளரான இவர், இயற்கை எரிவாயு வினியோகம், சந்தைப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

Advertisement