அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு

2

டெஹ்ரான்: ஈரானில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. யுரேனியம் செறிவூட்டலுக்கு இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஈரான் கூறினாலும், இங்கு தான் அந்த நாடு அணுஆயுதங்கள் தயாரித்து வந்ததாக மேற்கத்திய நாடுகள் கூறியிருந்தன.


ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் 3வது நாளை எட்டி உள்ளது. இந்த தாக்குதலில் கமேனி உள்ளிட்ட ஈரானின் முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இச்சூழ்நிலையில், பன்னாட்டு அணுசக்தி முகமைக்கான ஈரானின் தூதர் ரெசா நஜாபி கூறுகையில், ஈரானின் அமைதிப்பணிக்கான மற்றும் பாதுகாப்பாக இருந்த நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.


இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ரபேல் குரோஸி கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கிறது. மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொல்ல வேண்டும். ஈரானின் அணுசக்தி அமைப்புகள் தாக்கப்பட்டதாகவோ அல்லது சேதம் அடைந்தள்ளதாகவோ எந்த தகவலும் இல்லை எனக்கூறியுள்ளார்.


ரஷ்யா கோரிக்கையின்படி கூடிய இந்த அமைப்பின் அவசர கூட்டத்தில் ரபேல் குரோஸி பேசியதாவது: பதற்றத்தை மேலும் அதிகரிக்காமல் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் அணுசக்தி நிலையம், அணு ஆராய்ச்சி அமைப்புகள் உள்ளன. எரிபொருள் சேமிப்பு இடங்களும் உள்ளதால், அணுசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது எனத் தெரிவித்தார்.


மேலும் அவர், இந்த பகுதியில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு பொருட்கள் உள்ள இடங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளோம். தாக்குதல் அல்லது விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இன்று நிலவும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கிறது. பெரிய நகரங்களில் அதிகளவு மக்கள் வெளியேற்றக்கூடிய வேண்டிய மோசமான விளைவுகளுடன் கூடிய சாத்தியமான கதிரியக்க வீச்சை மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement