அதிகாரியை கார் ஏற்றி கொன்ற 3 மாணவர்களுக்கு 'குண்டாஸ்'

ஓசூர்: ஓசூரில், காரை ஏற்றி அரசு அதிகாரியை கொன்ற மாணவர்கள் மூவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே அன்னை அரவிந்தன் நகரில் வசித்தவர் சிவமூர்த்தி.

ஓசூர், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், உதவி ஆய்வாளராக இருந்தார். பிப்., 22ல் அவர் வீட்டின் முன் டூ - வீலர் நிறுத்தியிருந்தார்.

அவ்வழியாக, 'டெயோட்டா பார்ச்சூனர்' காரில் வந்த, ஓசூர் வசந்த் நகரை சேர்ந்த தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆதித்யா, 20, என்பவர், டூ - வீலரை எடுக்கக்கூறி தகராறில் ஈடுபட்டு, வீட்டின் முன் நின்றிருந்த சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், 35, மருமகள் அம்சவேணி, 33, பேத்தி நிலானி, 6, ஆகியோர் மீது காரை ஏற்றினார்.

இதில் சிவமூர்த்தி பலியானார். மற்றவர்கள் காயமடைந்தனர்.

ஓசூர் டவுன் போலீசார், ஆதித்யா மற்றும் அவருடன் இருந்த பெங்களூரு தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளியை சேர்ந்த ஹரிஷ், 19, ஓசூர், அம்மன் நகரை சேர்ந்த பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவன் ரித்திக்குமார், 20, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மூவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., பரிந்துரை படி, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையிலுள்ள அவர்களிடம், நேற்று வழங்கப்பட்டது.

Advertisement