அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை: சிவில் வழக்கில் வழிகாட்டுதல் வழங்க உத்தரவு

4

மதுரை: சிவில் வழக்குகளில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க வழிகாட்டுதல்களை உருவாக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இதன் உரிமை தொடர்பான சிவில் வழக்கில், ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம், 2001ல் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.


நீதிபதி என்.செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவு:

இவ்வழக்கு அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பானது. ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் மீது நடவடிக்கை இல்லை.


ஒழுங்கு நடவடிக்கை




அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யவில்லை. இதிலிருந்து அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்பது தெளிவாகியது. பொது நிலத்தின் பாதுகாவலராக இருக்கும் அரசு, மதிப்புமிக்க அரசின் சொத்துக்கள் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தால், அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. பொறுப்பான அதிகாரிகள் இதுபோன்ற வழக்குகளை எதிர்த்து போராட தவறுவது பொது நலனை கடுமையாக பாதிக்கிறது.


கீழமை நீதிமன்ற சிவில் வழக்கில், ஒரு எதிர்மனுதாரரான கலெக்டர் மீது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அரசு நிலத்தை பாதுகாப்பது, வழக்கு நடத்துவது போன்ற விவகாரங்களில் அரசு வழக்கறிஞர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். அதில், அரசுக்கு எதிரான சிவில் வழக்குகளில் அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன என்பதை விளக்க வேண்டும்.


நீதிமன்ற வழக்குகளில், அரசு அதிகாரிகளை எதிர்தரப்பாக சேர்க்கும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எழுத்துப்பூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, உத்தரவுகளை ரத்து செய்வதற்கான மனு, மேல்முறையீடுகள் மற்றும் தாமதத்தை மன்னிப்பதற்கான மனுக்கள், கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளால் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு சட்டப்பிரிவை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.


அறிக்கை தாக்கல்




ஆர்.டி.ஓ., தலைமையிலான சட்டப்பிரிவு, அரசு ஒரு தரப்பாக உள்ள அனைத்து சிவில் வழக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து, சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்யும். அவ்வப்போது அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக 6 மாதத்தில் அரசு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.


உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள், 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவு தொடர்பாக அரசு தொடர்ந்த வழக்குகள், 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவை ரத்து செய்ய மேற்கொண்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறையின் கூடுதல் தலைமை செயலர் 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement