ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதிலாக செங்கடல்; சவுதியின் அராம்கோ முடிவு

4


ரியாத்: போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், செங்கடல் வழியாக எண்ணெய் வர்த்தகத்தை துவக்க சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ முடிவு செய்துள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடங்களின் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், வளைகுடா கடல் பகுதிகளில் சரக்கு கப்பல்கள் முடங்கியுள்ளன. எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் தடை பட்டுள்ளது. எனவே, தடையற்ற எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய, மாற்று வழியை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கடல் வழியாக எண்ணெய் வர்த்தகத்தை துவக்க சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ முடிவு செய்துள்ளது.

வழக்கமாக வளைகுடா கடல்வழியாக எண்ணெய் வர்த்தகம் செய்து வந்த அராம்கோ, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள செங்கடல் வரை செல்லும் 50 லட்சம் பேரல் திறன் கொண்ட குழாய் பாதையை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களையும் கேட்டுள்ளது. யான்பு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியுமா என்று ஆலோசித்து வருகிறது.


கேள்விக்குறி!

அதேவேளையில், செங்கடல் பகுதியும் பாதுகாப்பானது அல்ல. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி பயங்கரவாத அமைப்பினர், இப்பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். இதனால் பெரிய கப்பல் நிறுவனங்கள் இந்த வழியை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

அண்மையில் அராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் அந்நிறுவனம் ஏற்கனவே பாதிப்பைச் சந்தித்துள்ளது.

Advertisement